நினைவில் நின்ற நடுப்பக்க கவிதைகள்

பாரியும் கெளரியும் அந்த காலை நேரத்தில் வழக்கம் போலவே தங்களை அடுத்த பத்துமணி நேர உழைப்புக்காக தயார்ப்படுத்தி கொண்டிருந்தார்கள் .ஒன்பது மணிக்கு கெளரியும், பத்து மணிக்கு பாரியும் ஆபிஸ் புகுந்தாக வேண்டும்.குழந்தை ஆதினி இன்னும் தூக்கம் கலைந்து எழவில்லை .அவளை செண்பகம் அக்கா வந்து கவனித்து கொள்வாள் என்பதால் இவர்கள் கண்டுகொள்ளவில்லை .இருவரும் வீட்டைவிட்டு கிளம்பும் போது செண்பகம் வீட்டிற்குள் நுழைந்தாள் .

பாரி கிளம்பும் போது அவனுடைய அப்பா கதிரவனின் அறையை எட்டி பார்த்தான் அவரும் நன்றாக தூங்கி கொண்டு இருந்தார் .இருவரும் புறப்பட்டு சென்றார்கள் .அப்போது பாரி”கெளரி அப்பாவ இன்னைக்கு எத்தனை மணிக்கு வரச்சொல்லி இருக்காங்க ?நானும் பர்மிஷன் போட்டுட்டு வந்திரவா?”என்றதும் அவள்”வேண்டா பாரி.நான் பாத்துக்கிறேன்.நான் ஆபிஸ்ல பர்மிஷன் வாங்கிருக்கேன்.”என்றதும் அவள் அவன் முதுகில் சாய்ந்தாள்.அவனிடம் “ஆதினி ரொம்ப பீல் பண்றா பாரி.

மாமா ரூமுக்கு ஒரு நாளைக்கு நூறு தடவை போய் அவர எழுப்புறா தெரியுமா?அப்புறம் அழ ஆரம்பிச்சுர்றா.சமாதானபடுத்தவே முடியல .அவர் அவள கூடவே வச்சு பழக்கிட்டார்.அவ தூங்கும் போது கூட பக்கத்திலேயே இருப்பார் .அவர இப்படி பாக்க முடியலடா.சீக்கிரமா அவர சரி பண்ணிறனும் எனக்கு அது மட்டும் போதும்.என் அப்பாவ விட எனக்கு உங்க அப்பாவ தான் ரொம்ப புடிக்கும்”என்றதும் அவளது கண்ணீரை அவன் உணர்ந்தான் முதுகில் படர்ந்த ஈரத்தால்.
மாலை நான்கு மணிக்கு அந்த ஆஸ்பத்திரியில் கெளரி கதிரவனுடன் காத்திருந்தாள் .கதிரவன் கெளரியின் தோளில் சாய்ந்து தூங்கி கொண்டு இருந்தார் .அப்போது பாரி வேகமா வந்து “என்னால ஆபிஸ்ல வேலைப்பாக்க முடியல அது தான் வந்துட்டேன் .டாக்டர் கூப்பிட்டாங்களா?”என்றதும் “இன்னும் இல்ல ரிசல்ட் பாத்துட்டு இருக்காங்க “என்றதும் பாரி பென்ஞ்சில் உக்காந்து அப்பாவை தன் மடியில் சாய்த்து கொண்டான் .உள்ளிருந்து அழைப்பு வரவே இருவரும் கிளம்பி போனார்கள் .டாக்டர் இருவரையும் பார்த்து மென்மையாய் சிரித்துகொண்டு வரவேற்றார் .

இருவரையும் பார்த்து “கொஞ்சம் விவரமா சொல்றேன் கேளுங்க .தூக்கம் நம்ம உடம்பில் மிக முக்கிய அற்புதமான நிகழ்வு .அது தினசரி நடந்தா எல்லாமே சரியா நடக்கும்.முக்கியமா மூளை சம்பந்தப்பட்ட வேலைகள் .அது தெரியாம தான் நம்மில் பல பேர் செல்போன் மூலமா தூக்கத்த கொன்னுட்டு இருக்கோம் .உங்கப்பவோட கண்டிஷன் வேற.உங்கம்மா இறந்தது அவர ரொம்ப பாதிச்சிருக்கு அதுல இருந்து வெளிய வர முடியல .அதனால தான் தனக்கு தானே தனிமைப்படுத்திக்கிட்டு இருந்திருக்கார்.தூங்கறது அவருக்கு கொஞ்சம் நிம்மதிய கொடுத்திருக்கு போல.தொடர்ந்து அதையே செய்திருக்கார்.அது தான் இப்போ பெரிய பிரச்சினையாக மாறிடுச்சு .அவருக்கு இப்போ எதுவுமே நினைவில் இல்ல.எப்பவுமே ஆழ்ந்த உறக்கத்தின் நிலையிலேயே இருக்கார் .அவர் முழிச்சிருக்குற நேரம் கனவு மாதிரி இருக்கு அவருக்கு .இது மாதிரி கேஸ் இங்க ரொம்ப குறைவு தான்.அதனால தொடர்ந்து கவுன்சிலிங் தரணும் .அதுமட்டுமல்ல அவருக்கு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திகிட்டே இருங்க .கல்யாண வீடியோக்கள்,போட்டோஸ் ,அவரோட ப்ரண்ட்ஸ் ,ரிலேடிவ்ஸ் தொடர்ந்து பாத்து அவர்ட்ட பேசிட்டே இருக்க சொல்லுங்க .அவர் தூங்கினாலும் கனவு மாதிரி எல்லாம் அவருக்கு உள்ள சேர ஆரம்பிச்சுரும் .சீக்கிரமா சரி ஆகிடுவார் .எங்களோட நீங்களும் சேர்ந்து அவருக்கு உதவி பண்ணினா இது கண்டிப்பா சாத்தியம் .அவரோட நினைவுகளை மீட்டு தரணும் அவ்ளோ தான் நம்ம வேலை.நினைவுகள் திரும்பினா தூக்கம் தானா போயிரும் நமக்கு இருக்குறது மாதிரியே “என்றார்.

பாரி ஊரில் இருந்து தன்னுடைய அக்கா,அண்ணன் எல்லோரையும் குடும்பத்தோடு வரவழைத்தான்.கதிரவன் தூங்கி கொண்டு இருந்தாலும் அவரை சுற்றி உக்காந்து எல்லோரும் பழைய விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள் .ஒரு நாள் மாடியில் உக்காந்து எல்லோரும் நிலாச்சோறு சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள் .பாரியின் அக்கா நந்தினி அனைவருக்கும் சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்தாள் .பாரி நந்தினியின் மடியில் படுத்திருந்தான் .இன்னோரு பக்கம் அவனுடைய அண்ணன் நீலன் படுத்திருந்தான் .பாரி நந்தினியிடம்”அப்பா பழைய மாதிரி வேணும்.எவ்வளவு சுறுசுறுப்பா இருப்பார் .நான் கெளரிய லவ் பண்றேன்னு சொன்னப்ப கூட கோபமேப்படல அவரு.கெளரி வீட்டுக்கு நடையா நடந்து அவுங்க சம்மதத்தோட எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சார் .அவள பல தடவை நந்தினின்னு உன் பேர் சொல்லி தான் கூப்புடுவார். ஆதினி பொறந்ததும் கெளரிய வேலைக்கு போக சொல்லிட்டு அவரும் அம்மாவும் சேர்ந்து தான் ஆதினிய பாத்துகிட்டாங்க .அம்மா இறந்ததுக்கு பின்னாடி கூட ஆதினிய விடவேயில்லை தெரியுமா?”என்றதும் அழ தொடங்கினான் .நந்தினி அவனோட கண்ணீரை துடைக்கும் போது “அவர் நம்ம ஹீரோடா .அவர்க்கு சரி ஆகிடும்.”என்றதும் எல்லோரும் அமைதியானார்கள் .
சில நாட்கள் கழித்து கதிரவன் எழுந்து நடந்து வந்து ஹாலில் உக்காந்தார் .எல்லோரும் அதிர்ச்சியாகவும் சந்தோஷமாகவும் பார்த்து கொண்டு இருந்தார்கள் .அவர் எல்லோரையும் திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தார் .அப்புறம் அவர் “நான் ஒரு லெட்டர் வச்சிருக்கேன் .

அத அவகிட்ட கொடுக்கணும் .ரொம்ப நாளா என்கிட்ட இருக்கு”என்றபடி யோசித்து கொண்டு இருந்தார் .பாரி அவர்ட்ட போய்”என்ன லெட்டர்ப்பா?யாருட்ட கொடுக்கணும் ?”என்றதும் அவர்”தெரியலயே ஆனா கொடுக்கணும் ரொம்ப நாளா என்னால கொடுக்க முடியல .ரொம்ப கஷ்டமா இருக்கு”என்றதும் அவரையே பார்த்துக்கொண்டே இருந்தார்கள் .ஆனால் அவரிடம் வேறு தகவல் எதுவுமே இல்லை.அவருக்கு எப்பவோ நடந்த ஒரு விஷயம் மட்டும் இப்போதைக்கு நினைவுக்கு வந்திருப்பது தெரிந்தது .பாரி அனைவரிடமும் “நாம அப்பாவுக்காக இத கண்டிப்பா பண்றோம் .இந்த லெட்டர் பத்தி விசாரிக்கணும்.அவருக்கு இருக்குற குழப்பத்தை சரி பண்ணனும் .அவர் கேள்விக்கு பதில தேடணும்.அவர் அவுங்க ப்ரண்ட்ஸ் அட்ரஸ் எல்லாத்தையும் ஒரு டைரியில் எழுதி இருப்பார் .நம்ம வீட்டு விசேஷத்துக்கு எதுவா இருந்தாலும் அவுங்க எல்லோருக்கும் பத்திரிக்கை அனுப்புவார் .அந்த அட்ரஸ் ,போன் நம்பர் வச்சு தான் தேடணும் .எவ்ளோ முடியுமோ அவ்ளோ சீக்கிரமா “என்றதும் தேட தொடங்கினார்கள் .போன் மூலமாக பெண்களும்,போன் இல்லாதவர்களை தேடி ஆண்களும் புறப்பட்டார்கள் .கதிரவன் தொடர்ந்து லெட்டர் பத்தி மட்டுமே பேசிக்கொண்டு இருந்தார் .

நண்பர்களில் பலருக்கு அந்த லெட்டர் பத்தி எதுவுமே தெரியல .வீட்டில் அனைவரும் முழுமுயற்சியில் தேடினார்கள் .அன்று ஒரு நாள் பாரியின் அண்ணனிடம் இருந்து போன் வந்தது.அவன்”பாரி உடனே கிளம்பி திருச்சி காந்தி ஆசிரமம் வந்திரு .”என்றதும் கிளம்பி போனான்.கூட கெளரி மட்டும் வந்திருந்தாள் .ஆசிரமத்தில் சந்திரன் என்பவரை சந்தித்தார்கள் .அவர் “அந்த லெட்டர் பத்தி தெரிஞ்சுக்கணுமா?”என்று சிரித்துகொண்டார் .பின்பு பாரியிடம்”உங்கப்பனுக்கு ஞாபகம் நடுவுல இருந்து வந்திருக்குடா.முழு கதையும் சொல்றேன் கேளுங்க “என்றவர் அனைவருக்கும் நடுவில் வந்து உக்காந்தார் .
நான் ,உங்கப்பன் இரண்டு பேரும் ரொம்ப நெருங்குன தோஸ்த் .பக்கத்து வீட்டு காரனுங்க.ஒரே பள்ளிக்கூடம் அப்புறம் ஒரே காலேஜ் .எங்கள யாராலும் பிரிக்கவே முடியாது.சண்டை வந்தாலும் ஒரு நாள் கூட தாங்காது .படிச்சு முடிச்சுட்டு கிடச்ச வேலைய பாத்தோம் .நிறைய நாள் வீட்டுக்கு பணம் அனுப்பிட்டு பட்டினி தான் கிடப்போம்.சேர்ந்து இருந்தா எங்களுக்கு பசி கூட தெரியாது.ஒரு தடவ நண்பர் ஒருத்தர் பரதநாட்டியம் பாக்க கூட்டிட்டு போனார் .அங்க தான் அவள பாத்தோம் .ஜெயந்தின்னு பேரு.அம்சமான பொண்ணு.அவளோட பரதநாட்டியம் தான் அன்னைக்கு நடந்தது.எனக்கு அவள ரொம்ப புடுச்சு போச்சு .அவளையே பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.அங்கிருந்து வரவே தோணல .ரூமுக்கு வந்ததுக்கு பிறகும் கூட பைத்தியம் மாதிரி உளறிகிட்டே இருந்தேன் .எங்க பாத்தாலும் ஜெயந்தியோட ஞாபகம் தான்.

அவ பரதநாட்டியம் எங்க நடந்தாலும் நாங்க தான் முதல் ஆளா போய் நிப்போம்.அவள பார்வைக்கு நான் தெரிய ஆரம்பிச்சேன் .அவளுக்கு என்னை பார்த்ததும் வெட்கம் வந்திரும் .வெறும் பார்வையில் மட்டுமே காதல் வளர்ந்துட்டு இருந்தது.அவ குரல கூட கேட்டது கிடையாது.அந்த சமயத்துல தான் தைரியமா ஒரு லெட்டர் எழுதி அவகிட்ட கொடுக்க போனேன் .அன்னைக்கு சரியான கூட்டம் அவ பக்கத்துல கூட போக முடியல .அன்னைக்கு நைட் ஊர்ல இருந்து என்னோட அம்மா இறந்துட்டாங்கன்னு தந்தி வந்தது.நான் கிளம்பும் போது அந்த லெட்டர உங்க அப்பன்கிட்ட கொடுத்து அவகிட்ட கொடுக்கும்படி சொல்லிட்டு போனேன் .நான் திரும்பி வர மூணு மாசம் ஆனது .அதுவரைக்கும் உங்க அப்பன் அந்த லெட்டர அவகிட்ட தரல.எவ்ளோ முயற்சி பண்ணியும் அவனால கொடுக்க முடியலைன்னு சொன்னான் .நான் அவள தேடி போனேன் .அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு .என்னைவிட உங்கப்பன் தான்டா ரொம்ப அழுதான் .அந்த லெட்டர பாத்து பாத்து அழுதான் .
வருஷம் ஓடி போச்சு .முதல்ல எனக்கு கல்யாணம்.அப்புறம் உங்கப்பனுக்கு கல்யாணம் ஆச்சு.நீங்க எல்லோரும் பிறந்துட்டீங்க அப்புறம் வாழ்க்கையும் மாறி போச்சு .நாங்களும் பிரிஞ்சு போயிட்டோம்.மாசம் தவறாம லெட்டர் போடுவான் உங்கப்பன் .எனக்கு ஒரே பொண்ணு தான் அவளும் வெளிநாட்ல செட்டில் ஆகிட்டா .நானும் என் மனைவி நதியா மட்டும் தனியா இருந்தோம் .ஒரு நாள் உங்கப்பன் என்னை தேடி வந்தான் கூட ஜெயந்தியோட .நான் அப்படியே உறைஞ்சு போய் நிக்குறேன் .அவன் என் மனைவிகிட்ட போய்” இவுங்க பேர் ஜெயந்தி .இவுங்க புருஷன் உயிரோட இல்ல.குழந்தைகளும் இல்ல.தனியா தான் இருந்தாங்க .அதனால தான் இங்க கூட்டிட்டு வந்தேன் .

நான் ஒரு தப்பு பண்ணினேன் ரொம்ப வருஷத்து முன்னாடி பயந்து போய் தள்ளியே நின்னுட்டேன் .நான் இப்ப செஞ்சத அப்ப செஞ்சிருந்தா என் நண்பன் ஜெயிச்சிருப்பான் .ரொம்ப நாளா எனக்குள்ள ஒரு குற்றஉணர்ச்சி குத்திகிட்டே இருக்குதுங்க”என்றதும் என் மனைவி”எனக்கு அவரோட காதல் பத்தி தெரியும் .நிறைய சொல்லி இருக்கார் .இனி ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா வாழ வேண்டிய நேரம் .அவுங்களும் எங்களோடவே இருக்கட்டும் .அதனால எந்த வருத்தமும் கிடையாது.காலம் தவறி கொடுத்தாலும் நீங்க உங்க நண்பனுக்கு கொடுத்தது ஒரு சிறப்பான பரிசு”என்றதும் நான் உங்கப்பன இறுக்கி கட்டிபுடுச்சுகிட்டேன்.உறவுகளுக்கு பதில் சொல்ல விரும்பாம இங்க வந்து தங்கிட்டோம்.அமைதியா வாழ்ந்துட்டு இருக்கோம் .உங்கப்பன் அத்தனை வருஷமா அதையே நினைச்சுகிட்டே இருந்திருக்கான் பாருங்களேன் “என்றதும் கண் கலங்கி போனார் .கிளம்பும் போது ஜெயந்தியையும்,நதியாவையும் பார்த்துவிட்டு வந்தார்கள் .

சில நாட்கள் கழித்து மீண்டும் கதிரவனோடு சந்திரனை பார்க்க வந்தார்கள் மொத்த குடும்பமும் .சந்திரனுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை தந்தது .மீண்டும் கிளம்பும் போது கதிரவன் “நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க நான் என் நண்பன் கூடவே இருக்கேன் .மறுபடியும் ஒரு வாழ்க்கைய புதுசா ஆரம்பிக்கணும்னு தோணுது .இப்போதைக்கு இது மட்டும் தான் ஞாபகத்தில் நிக்குது .உங்க ஞாபகங்கள் வரும் போது கண்டிப்பா உங்களையும் தேடி வருவேன்.”என்றதும் அனைவரும் அது தான் சரி என்பதாய் கிளம்பி போனார்கள் .சந்திரனும்,கதிரவனும் மறுநாள் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பி போனார்கள் நதியா,ஜெயந்தியுடன்.நினைவுகளின் ஆரம்புள்ளிகளை தேடி.

வாங்க என்ஜோய் பண்ணலாம்……

என் mail id : [email protected].

Leave a Comment